by Staff Writer 10-11-2020 | 4:22 PM
Colombo (News 1st) இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிறுவர் நோயாளர் அறுவை சிகிச்சைப் பிரிவை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தில், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையினூடாக மூன்றாம் நிலை சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், வைத்தியசாலையில் 116 கட்டில்களைக் கொண்ட சிறுவர் நோயாளர் விடுதிக்கு உரிய வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை பிரிவை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், குறித்த சிறுவர் நோயாளர் விடுதியின் இரண்டாம் மாடியில் அறுவை சிகிச்சைப் பிரிவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான செலவுகளுக்கு தேவைப்படும் நிதியினை நன்கொடையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.