யாழ். துரையப்பா விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்யவுள்ளதாக நாமல் ராஜபக்ஸ தெரிவிப்பு

by Staff Writer 09-11-2020 | 9:13 PM
Colombo (News 1st) யாழ். துரையப்பா விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்யவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இன்று தெரிவித்தார். வடக்கிற்கு சென்றுள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இன்று துரையப்பா விளையாட்டரங்கை பார்வையிட்டார். இதன்போது, அமைச்சர் விளையாட்டரங்கில் உடற்பயிற்சியிலும் ஈடுபட்டார். இதனையடுத்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துரையப்பா மைதானத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாகக் குறிப்பிட்டார். துரையப்பா மைதானத்தில் உதை பந்தாட்டத்திற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தவுள்ளதாக நாமல் ராஜபக்ஸ கூறினார்.
 நாடு பூராகவும் உதைபந்தாட்ட லீக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. யாழப்பாணத்திலும் நடைபெறும் போது இந்த மைதானம் முக்கியமானதாக விளங்கும். செயற்கை ஓடுதளம் அமைப்பதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம் . அது தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளோம். 2022 ஆம் ஆண்டு துரையப்பா மைதானத்தில் செயற்கை ஓடுதளம் அமைக்கப்படும். அத்தோடு, இங்குள்ள குறைபாடுகள் நிவர்த்திக்கப்படும்
என அவர் மேலும் கூறினார்.