by Bella Dalima 09-11-2020 | 7:23 PM
Colombo (News 1st) மியன்மார் பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகியின் ஆளும் தேசிய ஜனநாயக லீக் கட்சி முன்னிலையிலுள்ளது.
வாக்கெண்ணும் நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், தாம் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
மியன்மாரில் 2011 இல் இராணுவ ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இடம்பெற்ற இரண்டாவது பொதுத் தேர்தலில் மில்லியன் கணக்கானோர் வாக்களித்துள்ளனர்.
நேற்று (08) இடம்பெற்ற தேர்தலின் இறுதி முடிவு வௌியாக சில நாட்கள் ஆகலாம் என கூறப்படுகின்றது.
இந்நிலையில், ஆளும் கட்சி தாம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் மியன்மார் நிர்வாகத் தலைவரான ஆங் சான் சூகி பாரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், நேற்றைய தினம் வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் ஆங் சாங் சூகியின் ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றி பெறுவது மாத்திரமல்லாமல், 2015 இல் பெறப்பட்ட 390 ஆசனங்கள் என்ற சாதனையையும் முறியடிப்பதாக ஆளும் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.