by Staff Writer 09-11-2020 | 2:53 PM
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஆணைக்குழுவின் அதிகாரத்திற்கு எதிராகவும் அதன் கௌரவத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடப்பட்டுள்ளமையை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, நளின் பண்டார, J.C.அலவத்துவல, மயந்த திசாநாயக்க மற்றும் சுஜித் சஞ்ஜய பெரேரா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில், குறித்த ஐவரும் இன்று ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தனர்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, தலதா அத்துகோரள, ரஞ்சித் மத்தும பண்டார, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனுஷ நாணயக்கார, கலாநிதி ஷர்ஷ டி சில்வா, S.M.மரிக்கார் மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோரும் ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியிருந்தனர்.