தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை முதல் நீக்கம்

by Staff Writer 08-11-2020 | 11:26 AM
Colombo (News1st) மேல் மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 05 மணியுடன் நீக்கப்படவுள்ளதாக COVID-19 ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், குறித்த பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தவிர மெத்சந்த செவண, மிஹிஜய செவண, முகத்துவாரம் ரன்மிண செவண, மத்தேகொட சிரிசந்த உயன தெமட்டகொட, மாளிகாவத்தை NHS குடியிருப்பு தொகுதிகளில் வாழும் மக்கள், பயணங்களை தவிர்த்து வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு அரசாங்கம் கேட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, முகத்துவாரம், புளூமென்டல், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், கரையோரப் பொலிஸ், ஆட்டுப்பட்டித்தெரு, மளிகாவத்தை, தெமட்டகொட, வெல்லம்பிட்டி, பொரளை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை தவிர கம்பஹா மாவட்டத்தின் வத்தளை, பேலியகொடை, கடவத்த, ராகம, நீர்கொழும்பு, பமுனுகம, ஜாஎல மற்றும் சப்புகஸ்கந்த ஆகிய பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தின் எஞ்சிய மாவட்டமான களுத்துறை மாவட்டத்தின் ஹொரனை மற்றும் இங்கிரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளையும் வேகொட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவையும் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குருநாகல் நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதி, குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளையும் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்குள் பிரவேசிக்கவோ அங்கிருந்து வௌியேறவோ எவருக்கும் எந்த வகையிலும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.