கெரவலப்பிட்டியவில் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்கள் தாக்கியதாக பெண் முறைப்பாடு

by Staff Writer 08-11-2020 | 7:34 PM
Colombo (News 1st) வத்தளை - கெரவலப்பிட்டிய பகுதியில் பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்கள் சிலர் தம்மை தாக்கியதாக பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த குழுவினர் ஏற்கனவே தமது காணியை அத்துமீறி அபகரிக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக அப்பெண் குறிப்பிட்டார். கெரவலப்பிட்டிய - தஹம் மாவத்தையில் வசிக்கும் அவர் நேற்று (07) மாலை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். தமது காணியை விற்பனை செய்ததாக பத்திரமொன்றில் கையொப்பமிடுமாறு பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்கள் ஒரு மாதத்திற்கு முன்னர் அச்சுறுத்தல் விடுத்ததாக தாக்குதலுக்கு இலக்கான பெண் குறிப்பிட்டார். அதற்கு இணங்க மறுத்ததால் தமது வீடு உடைக்கப்பட்டதாகவும் அது தொடர்பில் வத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததால் ஆத்திரமடைந்த குறித்த குழுவினர் நேற்று மாலை தம்மை தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் வினவியபோது, இரு தரப்பினரிடமிருந்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஏனைய செய்திகள்