இலங்கையில் 35 ஆவது கொரோனா மரணம்

இலங்கையில் 35 ஆவது கொரோனா மரணம்

by Bella Dalima 08-11-2020 | 10:03 PM
Colombo (News 1st) இலங்கையில் 35 ஆவது கொரோனா மரணம் இன்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 78 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை, மேலும் 283 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலைய கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். இதற்கமைய, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணிகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10,220 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை COVID-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 13,702 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 562 பேர் வீடு திரும்பினர். இதற்கமைய குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களில் 5,383 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.