வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான சுகாதார நடைமுறைகள்

by Staff Writer 07-11-2020 | 5:56 PM
Colombo (News 1st) வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் ஆலோசனைக் கோவை வௌியிடப்பட்டுள்ளது.
  • ஒருவர் கொரோனா நோயாளியுடன் பழகியிருக்கலாமென்ற சந்தேகம் எழுந்த நாள் முதல் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்.
  • எனினும், வீட்டில் ஒருவருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைவாக தனிமைப்படுத்தல் காலம் நீடிக்கப்படலாம்.
  • எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வீட்டை விட்டு வௌியேறக் கூடாது.
  • அதேபோன்று, வௌிநபர்கள் எவரையும் வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது.
  • இயலுமானவரை, வீடுகளுக்குள் காற்றோட்டத்தைப் பேண வேண்டும்.
  • அனைத்து சந்தர்ப்பங்களிலும் வீடுகளுக்குள் ஒவ்வொருவருக்கிடையிலும் 01 மீட்டர் இடைவௌியைப் பேண வேண்டும்.
  • வீட்டிற்குள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது முகக்கவசம் அணிந்திருத்தல் கட்டாயமானது.
  • அழுக்கான கைகளினால் முகம், வாய், மூக்கு பகுதிகளை தொடக்கூடாது.
  • குடும்ப உறுப்பினர்களும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் 20 விநாடிகள் கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும்.
  • கை கழுவுவதற்கான வசதி இல்லாதவிடத்து, கிருமித்தொற்று நீக்கும் திரவத்தை பயன்படுத்தலாம்.
  • இயலுமானால், வீட்டிலுள்ள அனைவரும் நாளொன்றில் இரு தடவையேனும், உடல் வெப்பநிலையை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
  • வயோதிபர்கள் மற்றும் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டவர்களிடம் விலகியிருத்தல் அவசியமாகும்.
  • நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டவர்களை பராமரிக்க வேண்டிய தேவை காணப்படின், அவர்களுக்கான மருந்துகளை உரிய நேரத்திற்கு வழங்க வேண்டும்.
  • இருமல் , தும்மல் வரும் போது டிஷூத் தாள்களை பயன்படுத்தல் அல்லது முகத்தை முழங்கைகளின் உட்புறத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பயன்படுத்தப்பட்ட டிஷூ தாள்கள், உரிய வகையில் குப்பைக்கூடைகளுக்குள் அகற்றப்பட வேண்டியது அவசியமாகும்.
  • ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல் அவசியமானது.
  • நாளொன்றில் இரண்டு தொடக்கம் இரண்டரை லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும்.
  • ஒருவர், தாம் கொரோனா நோயாளியுடன் பழகியிருக்கலாமென்ற சந்தேகம் எழுந்தால், அவர் தனது வீட்டில் தனி அறையில் தங்க வேண்டும்.
  • அத்தகைய ஒருவர் - இயலுமானால், குளியலறை மற்றும் கழிப்பறை என்பவற்றை பிரத்தியேகமாக பயன்படுத்த வேண்டுமென்பதுடன், அவற்றை சுத்தமாக பேண வேண்டும்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், இவை உள்ளிட்ட மேலும் சில சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், COVID - 19 தொற்றிலிருந்து தம்மையும் சமூகத்தையும் பாதுகாப்பதற்கான இயலுமை ஏற்படுமென சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் வௌியிடப்பட்டுள்ள ஆலோசனைக் கோவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.