உயிரிழக்கும் முஸ்லிம்களை எரிப்பதற்கு எதிர்ப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களை எரிக்கும் இலங்கையின் செயற்பாட்டிற்கு சென்னையில் எதிர்ப்பு

by Staff Writer 07-11-2020 | 7:18 PM
Colombo (News 1st) இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் எரிக்கும் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று நேற்று (06) முன்னெடுக்கப்பட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிழந்தவர்களை எரிக்கும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினால் இந்த கவனயீர்ப்புப் ​போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதையும் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் உடல்களை எரிக்கும் செயற்பாட்டை உடனடியாகக் கைவிட்டு உயிரிழப்பவர்களை நல்லடக்கம் செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.