அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை

by Staff Writer 06-11-2020 | 9:54 AM
Colombo (News 1st) நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள், வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் அரிசி ஆலை உரிமையாளர்கள், வர்த்தகர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படுகின்றது. இதனைத் தவிர அரிசியை பதுக்கி வைத்துள்ள பகுதிகளை சுற்றிவளைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசி வகைகளை விற்பனை செய்ய வேண்டிய அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி நேற்று முன்தினம் (09) வௌியிடப்பட்டது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் சிவப்பு மற்றும் வௌ்ளை சம்பா அரிசி, சிவப்பு மற்றும் வௌ்ளை பச்சை சம்பா அரிசி ஆகியவற்றின் அதிகபட்ச சில்லறை விலையாக 94 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் வௌ்ளை நாட்டரிசியை ஒரு கிலோகிராம் 92 ரூபாவிற்கும் சிவப்பு மற்றும் வௌ்ளைப் பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 89 ரூபாவிற்கும் விற்பனை செய்ய வேண்டும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தம் நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.