இலங்கை பிரஜைகளை விரைவில் அழைத்து வருமாறு பணிப்புரை

சவுதி அரேபியாவில் தங்கியுள்ள இலங்கை பிரஜைகளை விரைவில் அழைத்து வர ஜனாதிபதி பணிப்புரை

by Staff Writer 04-11-2020 | 12:44 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று அபாயம் காரணமாக சவுதி அரேபியாவில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்துவர ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார். COVID - 19 அபாயம் காரணமாக நிர்க்கதியான இலங்கையர்கள் சவுதி அரேபியாவில் உள்ள சுமார் 150 காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் இலங்கைக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய, 2 விமானங்களை சவுதி அரேபியாவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். COVID - 19 பரவுவதை தடுப்பதற்கான தேசிய செயலணியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போதே இராணுவத் தளபதி இதனைக் கூறியுள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர் அசேல குணவர்தன உள்ளிட்ட சுகாதார சேவையின் உயர் அதிகாரிகள் பலரும் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். முப்படையினரால் முகாமைத்துவம் செய்யப்படுகின்ற தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட 72 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பலர் அடுத்த 2 நாட்களில் வீடுகளுக்கு திரும்பவுள்ளனர். இதற்கமைய, நாடு திரும்பவுள்ள இலங்கையர்களை குறித்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.