Colombo (News 1st) இலங்கை முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் அனுமதி பெற்ற தொழிற்சாலைகளை தொடர்ந்தும் நடாத்திச் செல்வதற்கு, ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் கட்டட நிர்மாண நடவடிக்கை, கடற்றொழில், விவசாயம், கைத்தொழில் துறைகள் மற்றும் ஏனைய தொழிற்சாலைகள் ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சாலை நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள தொழிற்சாலைகளை நடாத்திச் செல்ல, பொலிஸாரினால் விசேட நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனடிப்படையில் தொழிற்சாலைகள் தமக்கான அனுமதியை பெறுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து,
[email protected] எனும் இணையத்தள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.