by Staff Writer 01-11-2020 | 8:52 AM
Colombo (News 1st) பிரித்தானியாவில் 4 வாரங்களுக்கு நாடளாவிய முடக்கலை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் பொது முடக்கல் அமுல்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
எதிர்வரும் வியாழக்கிழமை முதல் புதிய விதிமுறைகள் அமுலுக்கு வரவுள்ளன.
கல்வி மற்றும் உடற்பயிற்சி தேவைகளுக்காக மாத்திரமே மக்கள் வீடுகளில் இருந்து வௌியேற அனுமதிக்கப்படவுள்ளனர்.
எவ்வாறாயினும் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்ந்தும் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரும் என கூறப்படுகின்றது.
பிரித்தானியாவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் 22000 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
மேலதிக கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி, தொற்று நிலையை குறைக்காதவிடத்து,
நாளொன்றில் நான்காயிரத்துக்கும் அதிகமான மரணங்கள் சம்பவிக்க கூடுமென அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆஸ்திரியா மற்றும் போர்த்துக்கலில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரியாவில் இரவு 8 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
போர்த்துக்கல்லில் தொழில் மற்றும் கல்வி தவிர்ந்த தேவைகளுக்காக மக்கள் வீடுகளில் இருந்து வௌியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.