கொழும்பிலிருந்து வௌியேறியவர்கள் தொடர்பில் விசாரணை

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

by Bella Dalima 31-10-2020 | 3:01 PM
Colombo (News 1st) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர் மேல் மாகாணத்திலிருந்து வௌியேறியவர்களை, அவர்கள் தங்கியுள்ள இடங்களிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் கொழும்பிலிருந்து வௌியேறியவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். எவரேனும் கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் சுற்றுலாத்தளங்களிலுள்ள தங்குமிடங்கள், ஹோட்டல்களுக்கு சென்றிருக்கும் பட்சத்தில் அவர்கள் தொடர்பில் தகவல்களைத் திரட்டுமாறு நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நேற்று அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், அப்பகுதிகளிலுள்ள சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைக்கமைய, குறித்த நபர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.