நாட்டில் 20 ஆவது கொரோனா மரணம் பதிவு

by Bella Dalima 31-10-2020 | 1:49 PM
நாட்டில் 20 ஆவது கொரோனா மரணம் இன்று பதிவாகியுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் PCR சோதனை அறிக்கை இன்று காலை வௌியானதுடன், அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு 12-ஐ சேர்ந்த 54 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண், நீரிழிவு நோயினால் கடந்த 29 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10,424 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 633 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டனர். தனிமைப்படுத்தல் நிலையங்களில் 83 பேரும் பேலியகொடை மற்றும் மீன்பிடித் துறைமுகங்களில் அடையாளம் காணப்பட்டோருடன் தொடர்புகளைப் பேணிய 236 பேரும் இதில் அடங்குகின்றனர். இதுவரை தொற்றுடன் அடையாளங்காணப்பட்டோரில் 6 , 123 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய தினம் 140 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,282 பேர் ஆக அதிகரித்துள்ளது.