தனிமைப்படுத்தல் விதிகளை மீறி மேல் மாகாணத்திலிருந்து வௌியேறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

by Staff Writer 30-10-2020 | 3:31 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் விதிகளை மீறி மேல் மாகாணத்திலிருந்து வேறு பகுதிகளுக்கு சென்றவர்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. இதற்காக விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் எதிர்வரும் 2 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 05 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர், அவர்கள் மீண்டும் கொழும்பிற்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் சோதனைக்குட்படுத்தி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். எந்தவொரு காரணத்திற்காகவும் மேல் மாகாணத்திலிருந்து வௌியேற வேண்டாமென நேற்று பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அறிவிப்பை மீறி பயணித்தவர்கள் மீண்டும் கொழும்பிற்குள் வரும் போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். எவரேனும் ஒருவர் புதன் அல்லது வியாழக்கிழமைகளில் மேல் மாகாணத்திலிருந்து வௌியேறியிருந்தால், அவர்களுக்கு எதிராகவும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படுமென அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.