ஆடை கைத்தொழில் துறையில் இரண்டாம் அலையின் தாக்கம்

ஆடை கைத்தொழில் துறையில் இரண்டாம் அலையின் தாக்கம்

by Staff Writer 30-10-2020 | 8:29 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் நாட்டின் பிரதான ஏற்றுமதித் துறையான ஆடை கைத்தொழில் துறையில் வியாபித்துள்ளது. மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதன் பின்னர் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலும் கொரோனா தொற்று தாக்கம் செலுத்தியது. இன்றுவரை கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் 414 பேரும், பியகம முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் 12 பேரும் கொக்கல முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் நாட்டின் ஏற்றுமதித்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள அழுத்தம் தொடர்பாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் பிரகாஷ் சுபசிங்ஹவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. இந்த நிலைமையிலும் நாட்டிலுள்ள ஏற்றுமதி தொழிற்சாலைகளில் பெரும்பாலானவற்றில் பணிகள் தொடர்வதாக அவர் கூறினார். இந்தத் துறை, கடந்த மாதம் இயல்பு நிலைக்கு திரும்பி கடந்த வருடம் அந்த மாதத்திற்கு இணையாக நூற்றுக்கு 5.6 வீத வளர்ச்சி பதிவானதாக சுபசிங்ஹ குறிப்பிட்டார். 2019 செப்டம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 952.1 மில்லியன் அமெரிக்க டொலர் என்பதுடன், இந்த வருடம் அந்த மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 1001.27 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. கெரோனா தொற்றினால் இந்த நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையாமல் பாதுகாக்கும் நடவடிக்கையாக இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இந்த நடைமுறைகள் இந்நாட்டு ஏற்றுமதித்துறையையும் பாதிப்பதாக பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.