இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர் காயம்?

by Staff Writer 29-10-2020 | 5:31 PM
Colombo (News 1st) எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. இராமநாதபுரம் மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது, காயமடைந்த தமிழக மீனவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. இதேவேளை, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. எனினும், இந்த விடயம் தொடர்பில் நேரடியான தகவல்கள் எதுவும் பதிவாகவில்லை என கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஊடகங்களில் வௌியாகியுள்ள தகவல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.