மாநகர சபை அமர்வில் கலந்துகொண்ட மணிவண்ணன்

இரண்டு வருடங்களுக்குப் பின் மாநகர சபை அமர்வில் கலந்துகொண்ட மணிவண்ணன்

by Staff Writer 29-10-2020 | 7:59 PM
Colombo (News 1st) யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இன்று நடைபெற்றது. மாநகர சபை உறுப்பினரான விஸ்வலிங்கம் மணிவண்ணன் இரண்டு வருடங்களுக்கு பின்னர் இன்றைய அமர்வில் கலந்துகொண்டார். 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மாநகர சபை உறுப்பினராக இருப்பதற்கு சட்டரீதியான வலு இல்லையென தெரிவித்து இடைக்கால தடை விதித்திருந்தது. என்றாலும், கடந்த அக்டோபர் 13ஆம் திகதி வழக்கு தொடுநர் இவ்வழக்கை வாபஸ் பெற்றிருந்தனர். இதன்மூலம் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மாநகர சபை உறுப்பினராக தொடர்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்த நிலையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்தும் மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் விஸ்வலிங்கம் மணிவண்ணனை நீக்குமாறு யாழ். மாவட்ட உதவி தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டதுடன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்குவதற்கு இரண்டு வார கால இடைக்கால தடை விதித்து யாழ். மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து, விஸ்வலிங்கம் மணிவண்ணன் இரண்டு வருடங்களுக்குப் பின் இந்த மாநகர சபை அமர்வில் கலந்துகொண்டார்.