எவ்வாறு COVID-19 பரவியது: விசாரிக்குமாறு உத்தரவு

Brandix தொழிற்சாலையில் எவ்வாறு COVID-19 பரவியது என விசாரிக்குமாறு சட்ட மா அதிபர் உத்தரவு

by Staff Writer 27-10-2020 | 5:59 PM
Colombo (News 1st) Brandix தொழிற்சாலையில் எவ்வாறு COVID-19 பரவல் ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணை செய்து இரு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். Brandix தொழிற்சாலையில் COVID-19 பரவல் ஏற்பட்டமைக்கு நிறுவனத்தின் நிர்வாகிகள், அதிகாரிகளின் கவனயீனம், பாதுகாப்பற்ற செயற்பாடு அல்லது அரச அதிகாரிகளின் கவனயீனம் எந்த அடிப்படையிலேனும் காரணமாக அமைந்துள்ளதா என்பதை ஆராயுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் உடனடியாக குற்ற விசாரணையை ஆரம்பிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தண்டனை சட்டக்கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ள குற்றங்கள் அல்லது தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்திற்கிணங்க குற்றமிழைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராயுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளுக்காக அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்றை நியமிக்குமாறும் சட்ட மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். விசாரணை தொடர்பிலான முதற்கட்ட அறிக்கையை நவம்பர் மாதம் 13 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்