மைக் பொம்பியோவிற்கு எதிர்ப்பு: மக்கள் விடுதலை முன்னணி அமெரிக்க தூதரகத்திடம் கடிதம் கையளிப்பு

by Staff Writer 27-10-2020 | 12:30 PM
Colombo (News 1st) மக்கள் விடுதலை முன்னணி இன்று இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திடம் கடிதமொன்றை கையளித்தது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் விஜயத்தை சக்தி மிக்க சுயாதீன மற்றும் ஜனநாயக இலங்கைக்கான அர்ப்பணிப்பிற்காக மேற்கொள்ளும் விஜயமாக தாம் கருதவில்லை என அந்த கடிதத்தில் மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது. இலங்கை அமெரிக்காவின் அழுத்தத்திற்குள் அடிபணிந்து நாட்டை அத்தியாவசியமற்ற, அதிக கேள்விக்குள்ளான பூகோள மற்றும் பிராந்திய சக்தியொன்றுக்குள் தள்ளுவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும்போது, ஜனநாயக மற்றும் சர்வதேச விதிமுறைகளைப் புறந்தள்ளி அமெரிக்கா செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தில் கையளித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் மற்றுமோர் பகுதியாக இராணுவ மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் பலவற்றை கைச்சாத்திட அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையின் வலய மற்றும் சர்வதேச சுயாதீனத் தன்மைக்கு தடைகளை ஏற்படுத்தும் விதத்தில் செயற்படும் அமெரிக்காவின் அபிலாசைகளுக்கு எதிராக எழுந்து நிற்க தம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.