by Staff Writer 27-10-2020 | 6:48 PM
Colombo (News 1st) யாழ். மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தீர்மானத்திற்கு இடைக்கால தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு நாளை (28) அறிவிக்கப்படும் என யாழ். மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மனு மீதான விசாரணை யாழ். மாவட்ட நீதிபதி வி.ராமக்கலன் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக யாழ். மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட மணிவண்ணன் பங்காளிக் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டதால், அவரை மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்திடம் அந்தக் கட்சி கோரியது.
அதற்கமைய, சட்டத்தரணி வி.மணிவண்ணனை யாழ். மாநகர சபை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் அறிவித்தது.
இதனையடுத்து, யாழ். மாநகர சபை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தாம் நீக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி யாழ். மாவட்ட நீதிமன்றில் வி.மணிவண்ணன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஆனந்தராசா, பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ். தெரிவத்தாட்சி அலுவலர் ஆகிய நால்வரும் மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.