பாகிஸ்தானில் குண்டுவெடிப்பில் 7 பேர் பலி

பாகிஸ்தானில் மத பாடசாலையில் குண்டுவெடிப்பு: சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி

by Bella Dalima 27-10-2020 | 2:15 PM
Colombo (News 1st) பாகிஸ்தானில் மத பாடசாலையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணத்தின் பெஷாவர் நகரில் உள்ள ஸ்பீன் ஜமாத் (Speen Jamaat) மசூதியில் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த மசூதியில் உள்ளூர் சிறுவர்களுக்கான மத பாடசாலையும் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், குறித்த பாடசாலையில் இன்று காலை வழக்கம் போல 80-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மதக் கல்வி பயின்று வந்தனர். காலை 8.30 மணியளவில் மசூதியின் மையப்பகுதியில் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் மசூதியை விட்டு வெளியே தப்பியோடினர். ஆனாலும், சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 70-க்கும் அதிகமான சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த குண்டு வெடிப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.