இந்தியா - அமெரிக்கா இடையில் BECA கைச்சாத்து

இந்தியா - அமெரிக்கா இடையில் அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

by Staff Writer 27-10-2020 | 8:25 PM
Colombo (News 1st) அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இந்திய விஜயத்தின் பின்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பருடன் அவர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. புவிசார் ஒத்துழைப்பிற்கான அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் Basic Exchange and Cooperation Agreement (BECA) இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தினூடாக கடல், வான் வரைபடங்கள், விளக்கப்படங்கள் புவியியல் ரீதியாக முக்கியமான தகவல்களின் பரிமாற்றம், குறிப்பாக இராணுவ தகவல்களை பரிமாற்றிக் கொள்ளல் என்பன இடம்பெறும். இதன் மூலம் அமெரிக்க செய்மதிகள் ஊடாக சேகரிக்கப்பட்ட தரவுகளை இந்தியா பெற்றுக்கொள்ள முடியும். அதேபோன்று, இந்தியாவின் தகவல்களை அமெரிக்கா பெற்றுக்கொள்ள முடியும். இதற்கமைய பயங்கரவாத இலக்குகள் மீது நீண்டதூர தாக்குதல்களை நடத்தும் போது இலக்குகளை சரியாக அடையாளப்படுத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதே இதன் அனுகூலமாகும். இந்திய கடற்பரப்பைப் போன்றே தரைப் பகுதியின் எல்லைகள் தொடர்பான தரவுகளை நேரடியாக உறுதி செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். அமெரிக்கா, இந்தியாவிற்கிடையில் இராணுவ உதவிகளை வழங்குதல் மற்றும் அதிசக்தி வாய்ந்த தகவல்களை பரிமாற்றிக் கொள்வது தொடர்பாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளின் மூன்றாம் கட்டமாக இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.