துமிந்த சில்வா விவகாரம் தொடர்பில் மனோ கணேசன்

துமிந்த சில்வா விவகாரம் தொடர்பில் மனோ கணேசன்

by Staff Writer 26-10-2020 | 10:36 PM
Colombo (News 1st) கொலை குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு தனது சமூகத்துடன் வாழ சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கொலை குற்றச்சாட்டின் நிமித்தம் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் இருக்கின்றார். சம்பவம் நிகழும் போது அவர் மது போதையில் இருந்துள்ளார். தற்போது அவர் சுமார் 5  வருடங்களை சிறையில் கழித்துள்ளார். அவர் மீது சட்டத்தை மீறிய வேறு குற்றங்கள் இருப்பின், சட்ட ஒழுங்கு துறை அவர் மீது குற்றஞ்சாட்டி வழக்கு தொடரலாம். நான் அரசியல்வாதி என்பதை விட ஒரு மனித உரிமை போராளி. வெள்ளை வேன் கடத்தல், சட்டத்துக்கு அப்பாலான கடத்தல், கொலை, கப்பம், அடாத்தான கைது ஆகியவற்றுக்கு எதிராக உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நான் போராடியுள்ளேன். இளையோர் நீண்ட காலமாக சிறையில் வைக்கப்பட கூடாது. குற்ற செயல்களில் ஈடுபடும் இளையோருக்கு திருந்தி வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இது என் பொதுவான கொள்கை நிலைப்பாடு. துமிந்த சில்வா ஏற்கனவே ஐந்து வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். அவர் அங்கே சீர்திருத்தத்துக்கு உள்ளாகியுள்ளார் என நம்புகிறேன். அவருக்கு திருந்தி, தனது சமூகத்துடன் வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என நான் எண்ணுகிறேன். அதேபோல், அரசியல் சார்ந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட தமிழ் கைதிகளும் சிறைகளில் உள்ளார்கள். இளைஞர்களாக இருக்கும்போது கைது செய்யப்பட்டு தம் வாழ்நாளில் கணிசமான காலத்தை இவர்கள் சிறையில் கழித்துள்ளார்கள். அவர்களும் சீர்திருந்தி, புனர்வாழ்வு பெற்று, சமூகத்துக்குள் சென்று தம் குடும்பங்களுடன் மனைவி மக்களுடன் வாழ விடுதலை வழங்கப்பட வேண்டும் எனவும் கோருகிறேன்.