சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் 7 சிறுவர்களுக்கு கொரோனா 

by Staff Writer 26-10-2020 | 2:06 PM
Colombo (News 1st) சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 10 பேர் COVID - 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 7 சிறுவர்கள் மற்றும் 3 தாய்மாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார். சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார தரப்பினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். பாராளுமன்றத்துடன் இணைந்த வகையில் சேவையாற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் பாராளுமன்ற கட்டட தொகுதியை இன்றும் நாளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இன்றும் நாளையும் பாராளுமன்ற கட்டட தொகுதி மற்றும் வளாகத்தில் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை, குளியாப்பிட்டியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொலன்னறுவை பக்கமுனவில் வடை வியாபாரி ஒருவர் இறால் வாங்குவதற்கென பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றிருந்த நிலையில் அவருக்கு மேற்கொண்ட PCR பரிசோதனைகளில் அவருக்கு COVID - 19 தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து பக்கமூன நகரம் இன்று தொற்று நீக்கம் செய்யப்பட்டது. ஹம்பாந்தோட்டவில் இரண்டு கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் ஒருவர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவராவார். இதன் காரணமாக ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் சந்தை என்பன மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். கொட்டகலை நகரில் 2 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதால் அப்பகுதியில் இன்று கிருமி தொற்றுநீக்கம் செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். பேலியகொனட மீன் சந்தைக்கு சென்ற வந்த இரண்டு நபர்களுக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அம்பன்பொல நகரின் பல கடைகள் இன்று முடப்பட்டிருந்தன. பேலியகொடவுடன் தொடர்புடைய மேலும் 02 மீன் வியாபாரிகள் மாத்தளை கலேவெலயில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேலியகொட மீன் சந்தையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒருவர், முடிவுகள் வெளிவருவதற்கு முன்னதாக, பஸ்ஸில் ஏறி அனுராதபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். குறித்த நபருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வவுனியா - கொழும்பு பஸ் ஒன்றிலேயே அனுராதபுரம் பொதானேகமவுக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. வெல்லம்பிட்டி - கொட்டிகாவடத்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளையடுத்து சுமார் 25 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கேகாலை தெஹியோவிட்ட பகுதியின் தல்துவ, மேல் தல்துவ உள்ளிட்ட பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார். குறித்த கிராமங்களைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டமையை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.