தடுப்புக்காவலில் உள்ளவரின் வாகனம் மீட்பு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதாகி தடுப்புக்காவலில் உள்ளவரின் வாகனம் மீட்பு

by Bella Dalima 23-10-2020 | 6:06 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் உள்ள சந்தேகநபர் ஒருவர் பயன்படுத்திய வாகனம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 25 ஆம் திகதி காத்தான்குடியில் மொஹமட் அக்ரம் கைது செய்யப்பட்டார். எனினும், அவரின் பெயரில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை அட்டாளைச்சேனை பகுதியில் கைப்பற்றியுள்ளனர். காத்தான்குடியில் இருந்து நுவரெலியாவிற்கு பயிற்சிக்கு செல்வதற்காக இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, கொக்கட்டிச்சோலை - முதலைக்குடா வாவி பகுதியில் நேற்று முன்தினம் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பொலிஸார் மீட்டுள்ளனர். மக்களினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.