by Staff Writer 22-10-2020 | 8:40 PM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான நிலைப்பாடு என்னவென ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஊடகவியலாளர்கள் இன்றும் வினவினர்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி இன்று சென்றிருந்தபோது, ஊடகவியலாளர்கள் இது குறித்து வினவினர்.
எவ்வாறாயினும், ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டமையால், முன்னாள் ஜனாதிபதியிடம் இன்று சாட்சி விசாரணை முன்னெடுக்கப்படவில்லை.
ஆணைக்குழுக்கள் சட்டத்தின் 26 ஆவது சரத்தின் கீழ், ஆணைக்குழு இதுவரை பெற்ற சாட்சியங்கள் தொடர்பில் சட்ட மா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இன்று கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கை தொடர்பிலான தீர்மானம் நாளை காலை அறிவிக்கப்படவுள்ளதுடன், இது குறித்து ஆணைக்குழு மேலும் கலந்துரையாடும் நோக்கில் சாட்சி விசாரணை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.