by Bella Dalima 22-10-2020 | 4:30 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸை அழிக்க முடியாது என்றும் அதன் பாதிப்பு எப்போதும் இருக்கும் என்றும் பிரிட்டனின் அரசு ஆலோசனைக் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கொரோனா தொற்று உலகின் 190-க்கும் மேற்பட்ட நாடுகளைக் கடுமையாக பாதித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு நாடுகளும் கொரோனா தொற்று பாதிப்பிற்கு எதிராகப் போராடி வருகின்றன.
இந்நிலையில், பிரிட்டனின் அரசு ஆலோசனைக் குழுவின் விஞ்ஞானி ஜான் எட்மண்ட்ஸ் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியைக் கிளப்பி உள்ளது.
“இந்த வைரஸுடன் நாம் எப்போதும் வாழ வேண்டி இருக்கும். இது ஒழிக்கப்பட வாய்ப்பில்லை.” என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளை எதிர்காலத்தில் அதிகளவு பயன்படுத்த வாய்ப்பிருப்பதால், நாம் அவற்றை கவனமுடன் கையாள வேண்டும் என தெரிவித்துள்ள எட்மண்ட்ஸ் பிரிட்டன் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டன் இதுவரை 6 கொரோனா தடுப்பூசி விநியோக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
பிரிட்டனில் இதுவரை 7,89,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.