களுத்துறையில் மேலும் 6 பகுதிகள் தனிமைப்படுத்தல்

களுத்துறை மாவட்டத்தில் மேலும் 6 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

by Staff Writer 22-10-2020 | 8:09 AM
Colombo (News 1st) களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 06 கிராம சேவையாளர் பிரிவுகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அகலவத்தை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அகலவத்தை, கொரொக்கொட, பேரகம, தாபிலிகொட, கெகுலந்தர வடக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளும் பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெல்லன கிராம சேவையாளர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒவிட்டிகல, பதுகம, பதுகம புதிய குடியேற்றம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் நேற்று (21) 17 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதுவரை 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சமன் கீகனகே தெரிவித்தார்.