பதவி வறிதாகியுள்ளதாக மணிவண்ணனுக்கு கடிதம்

யாழ். மாநகரசபை உறுப்பினர் பதவி வறிதாகியுள்ளதாக விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கடிதம்

by Staff Writer 21-10-2020 | 3:21 PM
Colombo (News 1st) யாழ். மாநகரசபை உறுப்பினர் பதவி வறிதாகியுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமென யாழ். மாநகரசபை தெரிவத்தாட்சி அலுவலர், விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் கட்டளைச்சட்டத்தின் 10 அ 1 அ பிரிவின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்படுமென மணிவண்ணனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கெதிராக மணிவண்ணன் சட்டநடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாதவிடத்து, குறிப்பிட்ட சில தினங்களின் பின்னர் அவரது பதவி வறிதாகியதாக அறிவிக்கப்படுமென நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவத்தாட்சி அலுவலர் இ.கி. அமல்ராஜ் கூறினார். விஸ்வலிங்கம் மணிவண்ணனைக் கட்சி உறுப்புரிமையிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளமையால், மாநகர சபை உறுப்பினர் பதவியை நீக்கி வேறொருவரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கையொப்பமிட்ட கடிதமொன்று யாழ். மாநகர சபை தெரிவத்தாட்சி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதற்கமைவாகவே யாழ். மாநகர சபை தெரிவத்தாட்சி அலுவலரால் வி. மணிவண்ணனுக்கு அறிவித்தல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.