மதுஷின் உடலை மனைவியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

மாகந்துரே மதுஷின் உடலை அவரது மனைவியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

by Staff Writer 20-10-2020 | 3:33 PM
Colombo (News 1st) பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷின் உடலை அவரது மனைவியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று முற்பகல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மாகந்துரே மதுஷின் மனைவி ஜயனி முத்துமாலி மற்றும் அவருடைய சித்தியான மல்லிகா சமரசிங்க ஆகியோர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி குணரத்னவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வாவினால் ஆராயப்பட்டது. இதனையடுத்து, மாகந்துரே மதுஷின் உடலை, அவரது மனைவியிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டார். மாளிகாவத்தை - எப்பல்வத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது இன்று அதிகாலை நடத்தப்பட்ட பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் பாதாள உலகக்குழு தலைவரான மாகந்துரே மதுஷ் உயிரிழந்தார். சுற்றிவளைப்பில் 22 கிலோகிராம் ஹெரோயினும் 02 கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதன்போது காயமடைந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.