ரிஷாட் தலைமறைவாகியிருக்க உதவிய 7 பேர் கைது

ரிஷாட் பதியுதீன் தலைமறைவாகியிருக்க உதவிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது 

by Staff Writer 19-10-2020 | 4:21 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தலைமறைவாகியிருக்க உதவியமை தொடர்பில் பெண் வைத்தியர் உள்ளிட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் தலைமறைவாகியிருக்க உதவியமை தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயம் குறித்து தௌிவுபடுத்தினார். சந்தேக நபர்கள் களுபோவில - கொஹுவல பகுதியில் 2 நாட்கள் தங்கியிருந்த பின்னர், கடந்த 15 ஆம் திகதி தெஹிவளையிலுள்ள குறித்த குடியிருப்பில் தங்கியிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் வைத்தியரின் கணவரும் சந்தேக நபர்களில் உள்ளடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.