by Staff Writer 19-10-2020 | 9:22 PM
Colombo (News 1st) பிள்ளையான் என அழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி டி. சூசைதாசன் முன்னிலையில் இன்று (19) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்றைய தினம் சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜராகும் அரச சட்டத்தரணி மன்றில் முன்னிலையாகவில்லை.
இதன் காரணமாக எதிர்வரும் நவம்பர் 10 மற்றும் 16 ஆம் திகதிகளில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் பிரதிவாதியான பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளார் கூறினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா என அழைக்கப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகத்தர் எம். கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான வினோத் என்றழைக்கப்படும் மதுசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.