SPB உயிரிழந்தமைக்கு சீனாவே காரணமென வழக்குத்தாக்கல்

S. P.பாலசுப்ரமணியம் உயிரிழந்தமைக்கு சீனாவே காரணம்: சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

by Staff Writer 17-10-2020 | 5:08 PM
Colombo (News 1st) பிரபல பாடகர் S. P.பாலசுப்ரமணியம் உயிரிழந்தமைக்கு சீனாவே காரணம் என சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவை சேர்ந்த சீனிவாச ராவ் எனும் ரசிகர் ஒருவரே சர்வதேச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த 8 மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். கொரொனா வைரஸை உருவாக்கியதாக சீனா மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், சீனா இதுவரை அதற்கு எவ்வித பதிலும் வழங்கவில்லை எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிர்க் கொல்லியை உலகம் முழுவதும் சீனா பரவச் செய்ததாலேயே பிரபல பாடகர் S. P.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் சீனா மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சீனிவாச ராவ் எனும் நபர் வலியுறுத்தியுள்ளார்.