800 திரைப்பட சர்ச்சை: முரளிதரனின் விளக்க அறிக்கை

800 திரைப்பட சர்ச்சை: முரளிதரன் விளக்க அறிக்கை வௌியீடு

by Staff Writer 17-10-2020 | 6:09 PM
ஓய்வுபெற்ற சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்படும் 800 திரைப்படம் பற்றிய சர்ச்சை தொடர்ந்தும் நீள்கின்றது. இந்த நிலையில், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு முத்தையா முரளிதரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். 800 திரைப்படத்தில் முரளிதரனின் பாத்திரத்தை விஜய் சேதுபதி ஏற்று நடிக்கிறார். இதற்கு தென்னிந்திய திரைப் பிரபலங்கள் பலரும் பகிரங்கமாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முரளிதரன் இலங்கை அரசியல்வாதிகளை ஆதரித்தவர் எனவும், அவருக்கு தமிழின பற்று இல்லை எனவும் தென்னிந்திய திரைத்துறை பிரபலங்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது,
இது நாள் வரையில் என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளைக் கடந்தே வந்துள்ளேன். அது விளையாட்டானாலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி. எனது வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள், விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களைக் கூற விரும்புகின்றேன். என்னைப் பற்றி திரைப்படம் எடுக்க நினைப்பதாகக் கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகிய போது முதலில் தயங்கினேன். ஆனால், முத்தையா முரளிதரனாக நான் படைத்த சாதனைகள் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும், இதற்கு பின்னால் என்னுடைய பெற்றோர், என்னை வழிநடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்து தான் இந்தத் திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன். இலங்கை தேயிலைத் தோட்டக் கூலியாளர்களாகவே எங்கள் குடும்பம் பயணத்தை ஆரம்பித்தது. 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாக பாதிக்கப்பட்டது இந்திய வம்சாவளி தமிழர்கள் தான். இலங்கை மண்ணில் 70-கள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு JVP போராட்டத்தில் நடந்த வன்முறை, பின்னர் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். என் 7 வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார். என் சொந்தங்களில் பலர் பலியாகினர். வாழ்வாதாரத்தை இழந்து பலமுறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஆதலால் போரில் நிகழும் இழப்பு அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கும் தெரியும். 30 வருடங்களுக்கு மேல் போர்ச்சூழலில் இருந்த நாடு இலங்கை. அதன் மத்தியில்தான் எங்கள் வாழ்க்கைப் பயணம் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி நான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதித்தேன் என்பது பற்றிய படம்தான் 800.
என்று முரளிதரன் தனது அறிக்கையில் தௌிவுபடுத்தியுள்ளார்.