கொட்டிகாவத்தையில் 10 கிலோ ஹெரோயின் கைப்பற்றல்

கொட்டிகாவத்தையில் 10 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது

by Staff Writer 17-10-2020 | 3:42 PM
Colombo (News 1st)  கொழும்பு - கொட்டிகாவத்தை பகுதியில் 10 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கொட்டிகாவத்தையிலுள்ள வாகன திருத்துமிடமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளூடாக ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வௌிநாட்டிற்கு தப்பிச்செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரே இந்தத் தகவலை வழங்கியுள்ளார். சந்தேகநபரிடமிருந்த 04 துப்பாக்கிகளும் ரவைகள் சிலவும் ஏற்கனவே கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். சந்தேககநபர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.