ராஜஸ்தானுடனான போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் வெற்றி

ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் வெற்றி

by Staff Writer 15-10-2020 | 8:03 AM
Colombo (News 1st) IPL கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. IPL கிரிக்கெட் தொடரின் 30 ஆவது லீக் ஆட்டம் ​நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மோதின. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. டெல்லி அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்களை எடுத்தது. டெல்லி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் அதிகபட்சமாக 57 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். ராஜஸ்தான் அணியின் சார்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 162 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியயை தழுவியது. டெல்லி அணியின் சார்பில் நோர்ட்ஜே மற்றும் தேஷ் பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.