கம்பஹா மக்களுக்கு நிவாரண நிதி வழங்குமாறு கோரிக்கை

மக்களுக்கு நிவாரண நிதி வழங்குமாறு கம்பஹா மாவட்ட செயலாளர் கோரிக்கை

by Staff Writer 15-10-2020 | 9:00 PM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய, அத்தனகல்ல, மீரிகம உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் COVID-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 361,725,000 ரூபா நிதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் நிதியமைச்சிடம் இந்த ​கோரிக்கையை முன்வைத்துள்ளார். கொரோனா முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளின் தாக்கத்தினை கருத்திற்கொண்டு 5000 ரூபா நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது உகந்தது என மாவட்ட செயலாளர் நிதியமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. COVID-19 தொற்றின் காரணமாக 72 ,345 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிதியமைச்சிடம் இன்று பிற்பகல் வினவியபோது, மாவட்ட செயலாளரினால் அனுப்பப்பட்ட கடிதம் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.