புதிய தனிமைப்படுத்தல் சட்டங்களை உள்ளடக்கிய வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் கைச்சாத்து

by Staff Writer 15-10-2020 | 5:40 PM
Colombo (News 1st) புதிய தனிமைப்படுத்தல் சட்டங்களை உள்ளடக்கிய வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி கைச்சாத்திட்டுள்ளார். மக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியைப் பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதார பாதுகாப்பு முறைமைகளை இந்த வர்த்தமானி உள்ளடக்கியுள்ளது. சட்டங்களை மீறுவோருக்கு எதிராக 10,000 ரூபாவை விட அதிகரிக்காத அபராதம் விதிப்பது, 6 மாத சிறைத்தண்டனை என்பவற்றில் ஒரு தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளையும் நீதிமன்றத்தினால் வழங்க முடியும். வர்த்தக நிலையங்களிலும் சேவை நிலையங்களிலும் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிமுறைகளும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. சேவை நிலையங்களுக்குள் அல்லது வர்த்தக நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் போது அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இருவருக்கு இடையில் ஒரு மீட்டருக்கு குறையாத சமூக இடைவௌி பேணப்படவேண்டும். சேவை நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் முன்னர் ஊழியர்களின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட வேண்டும். சேவை நிலையங்களுக்குள் பிரவேசிப்போரின் தகவல்கள் அடங்கிய பதிவேடு முறையாக பேணப்படவேண்டும் போன்ற விடயங்கள் இந்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏனைய செய்திகள்