நோயாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த நடவடிக்கை

by Staff Writer 15-10-2020 | 2:11 PM
Colombo (News 1st) நிலவும் கொரோனா நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக தேசிய வைத்தியசாலைக்கு வரும் கிளினிக் நோயாளர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலை ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த நோயாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வைத்தியசாலைக்குள் ஊழியர்களிடையே தொற்று பரவியதாக இதுவரை கண்டறிப்படவில்லை என்ற போதிலும், வைத்தியசாலைக்குள் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்தவுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார். இதனால் கிளினிக் நோயாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நோயாளர்களின் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்களை பார்வையிடுவதற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையையும் குறைக்கவுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.