by Staff Writer 15-10-2020 | 8:54 PM
Colombo (News 1st) திட்டமிட்ட சுற்றாடல் அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை சுற்றிவளைப்பதற்காக பிரத்தியேக பிரிவொன்றை ஸ்தாபிக்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இராணுவம் மற்றும் பொலிஸின் உயர்மட்ட அதிகாரிகள் இருவரின் தலைமையில் இந்த பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
சுற்றாடல் அழிப்பு முன்னெடுக்கப்படும் போது உடனடியாக அதனை சுற்றிவளைக்கும் நடவடிக்கையில் குறித்த பிரிவு ஈடுபடவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, 103 ஆறுகளை பாதுகாக்கும் நோக்கில் புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.
சுற்றாடலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பிலான முறைப்பாடுகளை செய்வதற்காக சுற்றாடல் அமைச்சு புதிய அவசர அழைப்பு இலக்கங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
சுற்றாடல் அமைச்சின் 1991, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் 1981, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் 1921 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பு மேற்கொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என மஹிந்த அமரவீர கூறினார்.