கொரோனா சிகிச்சைக்காக மேலும் 10 வைத்தியசாலைகள்

கொரோனா சிகிச்சைக்காக மேலும் 10 வைத்தியசாலைகள்

by Staff Writer 15-10-2020 | 11:59 AM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக, மேலதிகமாக 10 வைத்தியசாலைகளை தயார்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை 14 வைத்தியசாலைகளில் 2,400 கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு மேலதிகமாக 10 வைத்தியசாலைகளை தயார்படுத்தியுள்ளதாகவும் அமைச்சின் ஊடகப்பேச்சாளர், டொக்டர் ஜயருவன் பண்டார குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் எவரும் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எனினும், அவசர சிகிச்சைப்பிரிவில் 146 கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் டொக்டர் ஜயருவன் பண்டார கூறியுள்ளார். தேவைப்படும் பட்சத்தில் வைத்தியசாலைகளில், அதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.