ஊடகவியலாளர்கள் தாக்குதல்:பின்னணியில் அரச பொறிமுறை?

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதன் பின்னணியில் அரச பொறிமுறை: தொழில்சார் இணைய ஊடகவியலாளர்கள் ஒன்றியம் கண்டனம்

by Staff Writer 14-10-2020 | 8:48 PM
Colombo (News 1st) ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக தொழில்சார் இணைய ஊடகவியலாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - முறிப்பு பிரதேசத்தில் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களின் பின்னால் மணல் கடத்தல்கார்களும் சுற்றாடலை அழிக்கும் மரக்கடத்தல்காரர்களும் இருப்பதாக தொழில்சார் இணைய ஊடகவியலாளர்கள் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அண்மையில், மொனராகலையில் ஊடகவியலாளர் ஒருவருக்கும் இவ்வாறு மிக மோசமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பின்புலத்திலும் மணல் கடத்தல்காரர்களே இருப்பதாகவும் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த காலங்களில் வடக்கில் ஊடக சுதந்திரத்திற்கு எதிராக அரசாங்கத்தினால் அழுத்தம் விடுக்கப்பட்டமையை புதிதாக நினைவுபடுத்த வேண்டியதில்லையென தொழில்சார் இணைய ஊடகவியலாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவில் தாக்குதல் மேற்கொண்டவர்கள், வனஜீவராசிகள் மற்றும் வன இலாக்கா திணைக்களம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மரங்களை வெட்டியுள்ளமையை தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் வௌிப்படுத்தியுள்ளதாக அதில் குறிப்பிட்ப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு எதிராக அரச பொறிமுறை ஒத்துழைப்புடன் இடம்பெறும், தாக்குதல் சிறந்த எதிர்காலத்திற்கான மகிழ்ச்சியான நகர்வு அல்லவெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.