அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்தும் அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி

by Staff Writer 13-10-2020 | 8:26 PM
Colombo (News 1st) COVID-19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவது தொடர்பிலான கருத்தாடல் நிலவும் நிலையில், அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கமைய, அபிவிருத்தித் திட்டங்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைச்சரவையின் அனுமதியைப் பெறும் நடைமுறை இலகுபடுத்தப்படவுள்ளது. எதிர்காலத்தில் திறைசேரியின் செயலாளர், உரிய அதிகாரிகளின் அனுமதியுடன் நடைமுறைப்படுத்தக்கூடிய விடயங்களைத் துரிதப்படுத்தி மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அமைச்சரவையை தௌிவுபடுத்துவது மாத்திரம் போதுமானதாகும். ஒப்பந்தக்காரர்கள் நிறைவேற்றும் பணிகளுக்காக தாமதமின்றி கொடுப்பனவுகளை வழங்குவதற்கான புதிய நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்தக்காரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு திறைசேரி பிணைகள் அல்லது வசதியை ஏற்படுத்தும் கடிதங்களை வழங்குவதன் மூலம் முக்கிய அபிவிருத்திப் பணிகளுக்கு தொடர்ச்சியாக நிதி கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும். இதேவேளை, அனைத்து அதிவேக வீதிகளையும் ஒரு நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்து திறைசேரி செயலாளர் தனியுரிமை கோரும் நிறுவனமொன்றை ஸ்தாபிக்கவும் பிரதமர் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.