பாட்டலிக்கு எதிரான வழக்கு: விசாரணை திகதி அறிவிப்பு

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணைக்கான திகதி அறிவிப்பு

by Staff Writer 12-10-2020 | 2:04 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட 3 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த இதற்கான உத்தரவை இன்று (12) பிறப்பித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி இரவு இராஜகிரிய பகுதியில் விபத்தொன்றை ஏற்படுத்தி இளைஞர் ஒருவரை காயப்படுத்தியமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி சாட்சியம் வழங்குவதற்காக மன்றில் ஆஜராகுமாறு மனுதாரர்களின் 05 சாட்சியாளர்களுக்கும் அறிவித்தல் அனுப்புமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாட்டலி சம்பிக்க ரணவக்க செலுத்தியதாக கூறப்படும் ஜீப் வண்டியை அன்றைய தினம் நீதிபதியிடம் முன்னிலைப்படுத்துமாறு, மின்சக்தி அமைச்சின் செயலாளருக்கு இதன்போது உத்தரவிடப்பட்டுள்ளது. பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் வழக்கின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரதிவாதிகளான துசித திலும் குமார மற்றும் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுதத் அஸ்மடல்ல ஆகியோரும் இன்று மன்றில் ஆஜராகியிருந்தனர்.