05 நாட்களில் 09 மில்லியன் பேருக்கு PCR பரிசோதனை

சீனாவில் 05 நாட்களில் 09 மில்லியன் பேருக்கு PCR பரிசோதனை

by Chandrasekaram Chandravadani 12-10-2020 | 1:41 PM
Colombo (News 1st) சீனாவின் Qingdao பிராந்திய மக்களுக்கான COVID - 19 பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 05 நாட்களில் சுமார் 09 மில்லியன் பேருக்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பிராந்திய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 12 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பரிசோதனை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் 05 மாவட்டங்கள், மூன்று நாட்களிலும் முழு பிராந்தியமும் 05 நாட்களிலும் பரிசோதனைக்குட்படுத்தப்படுமென Qingda மாநகர சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தொற்றுக்குள்ளான 12 பேரும் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலையில் சுமார் 114,862 பேருக்கு PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சீனாவில் இதுவரை 85,578 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 4,634 பேர் உயிரிழந்துள்ளனர். 230 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தரவுகளின் அடிப்படையில், கொரோனா வைரஸ் தொற்றை சீனா பெரும்பாலும் கட்டுப்படுத்தியுள்ளமை தௌிவாகின்றது. முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த இடமான வூஹான் நகரில், 11 மில்லியன் பேருக்கான PCR பரிசோதனைகள் 10 நாட்களில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.