அரச திணைக்களங்கள் சில தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன

அரச திணைக்களங்கள் சில தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன

by Fazlullah Mubarak 12-10-2020 | 12:18 PM

அரச திணைக்களங்கள் சில இன்று (12) தொடக்கம் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளன.

மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பொது மக்களுக்கான சேவை இன்று தொடக்கம் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதற்கமைய, திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி, வேரஹெர அலுவலகங்கள் மூடப்பட்டிருக்குமென அவர் கூறியுள்ளார். இதேவேளை, ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளையும் இன்று தொடக்கம் 05 நாட்களுக்கு இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கொழும்பு மாநகர சபையின் பொது மக்கள் சேவை பெறுவதற்கான தினம் மீள் அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கம்பஹா மாவட்டத்திற்கான தபால் சேவையும் மத்திய தபால் பரிமாற்றகத்தின் நுகர்வோர் சேவை விநியோகமும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊடாக வர்த்தக சேவைகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தபால் பொதிகளை தபாலில் சேர்ப்பதற்கு, வர்த்தக பிரிவின் உதவி அத்தியட்சகருடன் தொடர்புகொண்டு தமக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியுமென தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.