மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகளைத் திறக்க அனுமதி

ஊரடங்கு அமுலிலுள்ள பகுதிகளில் மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகளைத் திறக்க அனுமதி

by Staff Writer 09-10-2020 | 3:38 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள பகுதிகளில் இன்று காலை முதல் இரவு 08 மணி வரை மருந்தகங்கள், சதொச, கூட்டுறவு மற்றும் பல்பொருள் அங்காடிகளைத் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். கம்பஹா மாவட்டத்தின் 18 பொலிஸ் பிரிவுகளுக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது. இதனடிப்படையில், கம்பஹா பிராந்தியத்தின் கம்பஹா, கனேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிபிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொடை, வெயாங்கொடை, மினுவாங்கொடை, வீரகுல, வெலிவேரியா, பல்லேவெல, யக்கல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கும் களனி பிராந்தியத்தின் ஜாஎல, கந்தான, பொலிஸ் பிரிவுகளுக்கும், நீர்கொழும்பு பிராந்தியத்தின் திவுலப்பிட்டிய , மற்றும் சீதுவ பொலிஸ் பிரிவுகளுக்கும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதிகளுக்குள் செல்வது, அங்கிருந்து வௌியேறுவது, அந்தப் பகுதிகளூடாகப் பயணிப்பதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் அனைவரும் தத்தமது வீடுகளில் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.