பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள்

பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள்: வக்பு சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிக்கை

by Staff Writer 08-10-2020 | 4:34 PM
Colombo (News 1st) நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள COVID-19 தொற்று நிலை காரணமாக பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் தொடர்பில் வ​க்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது. 100 பேருக்கு மேல் தொழக்கூடிய பள்ளிவாசல்களில் 50 நபர்கள் என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டவாறு ஐவேளைத் தொழுகைகளையும் ஜும்மா தொழுகையையும் மாத்திரம் நடத்த வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 100 பேர்களை விட குறைந்த தொகையினர் தொழக்கூடிய பள்ளிவாசல்களில் அத்தொகையில் 50% மாத்திரமே அனுமதிக்கப்படுவர். இந்த விடயம் தொடர்பில் மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை மேற்சொன்ன செயற்பாடுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து ஒன்றுகூடல்களையும் இடைநிறுத்த வேண்டும் என வக்பு சபை தெரிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரை வரையறுக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிப்புரைகளை நிறைவேற்றத் தவறுபவர்கள் அல்லது பொறுப்புதாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் A.B.M.அஷ்ரப் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.